அமராவதி: திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரம் குறித்து நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் மாதவ் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஜெகன் ஆட்சியினர் தவறு செய்தது மட்டுமல்லாது, அதை மறைக்க எங்கள் மீதே குற்றம் சாட்டுகின்றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களுக்கு சிபிஐ ஒரு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து மீண்டும் துல்லியமாக விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் அதற்கான அறிக்கையை சமர்பிப்போம். இது இந்து மக்களின் நம்பிக்கை தொடர்பான விவகாரம். கடவுளிடம் விளையாடினால் கண்டிப்பாக அதற்கான விளைவுகளை ஜெகன் ஆட்சியினர் சந்தித்தே ஆக வேண்டும். 2022ம் ஆண்டே ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரும் நெய்யில் கலப்படம் உள்ளது என அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர். அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? நான் ஆட்சிக்கு வந்ததும், முதலில் கலப்பட நெய் விவகாரத்தை கையில் எடுத்தேன். இதில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக என்டிடிபி கொடுத்த அறிக்கையை தான் நான் வெளியிட்டேன். 2019ல் ஜெகன் ஆட்சிக்கு வந்தது முதல் 2024ம் ஆண்டு ஜெகன் முதல்வர் பதவியில் இருந்து இறங்கும் வரை கலப்பட நெய்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.







