உச்சக்கட்ட பரபரப்பில் தென்காசி.. இன்று தபால் ஓட்டுகள் மறுஎண்ணிக்கை..!

தென்காசி: 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.பழனி நாடாரும், அதிமுக சார்பில் வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பழனி நாடார் செல்வமோகன்தாஸை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பழனி நாடாரின் இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்த செல்வமோகன்தாஸ் பாண்டியன், தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இம்மாத தொடக்கத்தில் நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில், தபால் வாக்குகள் பதிவு செய்ததிலும் எண்ணிக்கையிலும் குளறுபடிகள் நடந்துள்ளது எனவும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தார்.

தபால் வாக்குகளை 10 நாட்களில் மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அத்துடன், வழக்கின் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு வழங்க வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் தொடங்கும் இந்த வாக்கு எண்ணிக்கைக்கான தேர்தல் அதிகாரியாக உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது வேட்பாளர்களோ அல்லது அவர்கள் சார்ந்த ஒரு பிரதிநிதியோ அந்த இடத்தில் இருக்கலாம். நேற்று அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. அந்த வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடாரும், அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் தரப்பில் மேலகரம் அதிமுக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமார் வாக்கு எண்ணும் மையத்தில் இருப்பார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி அங்கு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த முடிவு அப்படியே இருக்குமா? அல்லது வெற்றி மாறுமா? என்ற கேள்வி தென்காசி தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது. வேட்டையாடிய