சீமானிடமிருந்து கைநழுவியது கரும்பு… விவசாயி சின்னத்திற்கும் உங்களுக்கும் ராசியில்லை… வேறு சின்னத்தில் போட்டியிடுங்கள் – நீதிமன்றம் அறிவுறுத்தல்.!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் கடந்த 5 தேர்தல்களில் எங்கள் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டது. ஆனால் தற்போது அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் கர்நாடகா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்துவிட்டு கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தான் அவர்களுக்கென ஒரு பொதுவான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

மற்றபடி குறிப்பிட்ட வாக்கு வங்கி இல்லாத, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் தனி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். தேவைப்படும் பட்சத்தில் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை அணுகி எங்களுக்கு மீண்டும் இதே சின்னத்தை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று கோரும் பட்சத்தில் அந்த சின்னம் மீண்டும் அவர்களுக்கு ஒதுக்கப்படும். அதன்படி கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் கட்சி எங்களிடம் கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. உங்கள் கட்சிக்கும், கரும்பு விவசாயி சின்னத்திற்கும் ராசி இல்லை என்று கருதுகிறேன். எனவே இந்த முறை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும் வேறு சின்னத்தில் போட்டியிடுமாறு அறிவுறுத்தி உள்ளது.