சூத்திரன் சர்ச்சை.. ஆ.ராசாவை கண்டித்து இந்துத்துவ அமைப்புகள் இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்..!!

புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக கூறி அவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய வீடியோ கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆ.ராசா தன்னுடைய உரையில், “கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.

சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.

விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம் என ராசா பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்தன. ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. காவல்நிலையத்திலும் ஆ.ராசா மீது புகாரளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு ஆதரவளிக்கும்படி வணிகர் சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், வாகன போக்குவரத்து சங்கங்களிடம் இந்து முன்னணி ஆதரவு திரட்டியது. இதில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.