திடீரென பெய்த ஆலங்கட்டி மழை… நூற்றுக்கணக்கான கிளிகள் பலியான பரிதாபம்- முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்.!!

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இந்த பலத்த மழையில் அங்குள்ள கனரா வங்கி அருகே உள்ள மரம் வேருடன் முறிந்து விழுந்துள்ளது.

இந்த மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் வசித்துவந்த நிலையில், அவை கிளையில் சிக்கி பறந்த செல்ல முடியாமல் தவித்துள்ளன. இதையடுத்து மரம் முறிந்து விழுந்த நிலையில் நூற்றுக்கணக்கான கிளிகள் உயிரிழந்துள்ளன. மரம் விழுந்த விபத்தில் சிக்கியும், ஆலங்கட்டி மழையால் காயப்பட்டும் இந்த கிளிகள் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவத்தால் சோகமடைந்த அப்பகுதி மக்கள் கிளிகளை சேகரித்து முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் திடீரென பெய்த கனமழையால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், விவசாயிகள் பயிரிட்டிருந்த தென்னை, வாழை, கரும்பு ஆகிய பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் நாராயன் கௌடா பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.