ஒத்த எண்ணம் கொண்ட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் -தலைமையிடத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள்.!!

2024ம் ஆண்டுக்கான (நாடாளுமன்ற தேர்தல்) நம்பகமான மாற்றுக்கு வழி வகுக்கும் ஒரு தளத்தை உருவாக்க,ஒத்த எண்ணம் கொண்ட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மணிஷ் திவாரி, கபில் சிபல், அகிலேஷ் பிரசாத் சிங், சங்கர் சிங் வகேலா, சசி தரூர், எம்.ஏ.கான், சந்தீப் தீட்சித், விவேக் தன்கா, ஆனந்த் சர்மா, பிருத்விராஜ் சவான், பூபிந்தர் சிங் ஹூடா, ராஜ்பப்பர், மணி சங்கர் ஐயர், பி.ஜே.சூரியன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு குலாம் நபி ஆசாத் வீட்டில் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வி குறித்தும், தோல்வியால் ஏற்பட்டுள்ள மனச்சோர்விலிருந்தும் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை வெளியேற்றுவது தொடர்பாக அவர்கள் விவாதித்தனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க.வை எதிர்க்க அனைத்து மட்டங்களிலும் கூட்டு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தலைமை மற்றும் முடிவெடுக்கும் மாதிரியை காங்கிரஸ் கடைப்பிடிப்பதே ஒரே வழி. 2024ம் ஆண்டுக்கான நம்பகமான மாற்றுக்கு வழி வகுக்கும் ஒரு தளத்தை உருவாக்க, ஒத்த எண்ணம் கொண்ட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு காங்கிரஸ் கட்சியை நாங்கள் கோருகிறாம் என்று தெரிவித்துள்ளனர்.

2020 ஆகஸ்ட் மாதத்தில் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் மற்றும் மணிஷ் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி23), காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு கட்சிக்கு முழுநேர தலைவர் அவசியம் என்றும், கட்சி அமைப்பில் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.