சென்னை ஐஐடியில் மேலும் உயரும் பாதிப்பு… இதுவரை 55 பேருக்கு கொரோனா உறுதி-அச்சத்தில் மாணவர்கள்.!!

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.அத்துடன் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் தற்போது சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் கொரோனா கூடாரமாக படிப்படியாக மாறி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள், ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கடந்த சில நாட்களாக கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் 55 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை; இப்போதுவரை தொற்று பாதிப்பு விகிதம் குறைவாகதான் உள்ளது. நோய் பாதிப்பு அதிகரித்தாலும் பரிசோதனைக்கு ஏற்ப நோய் பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது” என்றார்.