கோவையில் 1431 ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாம்..!

கோவையில் 1431ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் முகாம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் இம்முகாமில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நில அளவை கருவிகளையும் பார்வையிட்டார். இந்த வருவாய் தீர்வாயம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று முதல் 1ஆம் தேதி வரை (விடுமுறை நாட்கள் திங்கட்கிழமை அல்லாமல்) நடைபெறுகிறது. முகாமினை வட்டங்கள் தோறும் சிறப்பாக நடத்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் சூலூர் வட்டம் செஞ்சேரிபுதூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணி இடையில் காலமான ஆரான் என்பவரது மகள் ஜானகிக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.