பிரியங்கா வெளிநாடு பயணம்: முக்கியமா..? பாஜக கடும் விமர்சனம்..!!

புதுடில்லி : மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம், ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு விசாரணை என, பல நெருக்கடிகளில் காங்கிரஸ் சிக்கித் தவிக்கும் வேளையில், அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வெளிநாடு சென்றிருப்பதை பா.ஜ., விமர்சித்துள்ளது.மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதை அடுத்து, அங்கு கூட்டணி ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை உருவாகி உள்ளது. ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து காங்., – எம்.பி., ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. சோனியாவும் விரைவில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.இந்நேரத்தில் காங்., பொதுச் செயலர் பிரியங்கா, புதுடில்லியில் இருந்து மும்பை சென்று, அங்கிருந்து தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு பறந்ததாக, பா.ஜ., பிரமுகர் அமித் மால்வியா, சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ‘காங்., தலைவர்கள் தெருவில் இறங்கி வியர்வை சிந்தி போராடிக் கொண்டிருக்கையில், பிரியங்காவுக்கு வெளிநாடு பயணம் முக்கியமாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.