கண்ணீர்மல்க தாயாரின் உடலை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்தார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் டீக்கடை நடத்தி வந்த மோடி, இன்று அரசியலில் மிகப்பெரிய உயரத்தை எட்டி உள்ளார் என்றால் அதற்கு அவரது தாயார் ஹீராபென்னும் ஒரு முக்கிய காரணம்.

மோடியின் தாயார் ஹீராபென்னின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தனது தாயின் உடலை தனது தோளில் சுமந்து வந்ததைப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் கண்கலங்கினர்.

பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு தகனம் செய்யும் இடத்துக்கு ஹீராபென்னின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது மோடியும் அந்த ஆம்புலன்ஸில் சென்றார். வழிநெடுக ஹீராபென்னின் உடலுக்கு மலர்த்தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஹீராபென்னின் இறுதி ஊர்வலத்தில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.