கடந்தாண்டு வன்முறை உச்சத்திற்குப் போன நிலையில், அப்போது முதல்வராக இருந்த பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்தாண்டு பிப்ரவரி 13ம் தேதி அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது சட்டசபை கலைக்கப்படவில்லை. மாறாக சஸ்பென்ட் செய்யப்படுவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே சுமார் ஓராண்டுக்குப் பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறுவதாக உள்துறை அறிவித்துள்ளது. ஓராண்டாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், அதைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் தான் முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்ட நிலையில், கேம்சந்த் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை ஏற்று ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதன்படி மாலை 6 மணியளவில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. கேம்சந்த் சிங்கிற்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் நெம்ச்சா கிப்கென் மற்றும் லோசி திகோ ஆகியோர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் கேம்சந்த் , மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர். துணை முதல்வர்களாக நெம்ச்சா கிப்கென், குகி பழங்குடி சமூகத்தையும் லோசி திகோ நாகா பழங்குடி சமூகத்தையும் சேர்ந்தவராக உள்ளனர்.
61 வயதான கேம்சந்த், அரசியல் சாதியப் பிளவுகளைத் தாண்டி நடுநிலையான தலைவராகக் கருதப்படுகிறார். அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்கக்கூடிய தலைவராகவும் அவர் இருக்கிறார். இப்போது அங்குக் கடும் குழப்பம் இருக்கும் சூழலில் சரியான நிர்வாகத் தேர்வாகப் பார்க்கப்படுகிறார். வெற்றுப் பேச்சுக்களுக்குப் பதிலாக, அமைப்பு, கட்டுப்பாடு, மிதமான அதிகாரத்தை அவர் பயன்படுத்துவார் என தெரிகிறது.







