காப்பீட்டு தொகை செலுத்தி பயிர்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்- கோவை கலெக்டர் சமீரன் அறிவுறுத்தல்..

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு பயீர் சாகுபடி செய்யும் போது எதீர்பாராத காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் 2022-23-ம் ஆண்டு இரபி பருவத்திற்கு கோவை மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய திட்ட செயலாக்க ஆணை பெறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் வாழைப் பயிருக்கு 26 பிர்க்கா, கத்தரி பயிருக்கு 4 பிர்க்கா, வெங்காய் பயிருக்கு 6 பிர்க்கா, தக்காளி பயிருக்கு 14 பிர்க்கா, மரவள்ளி பயிருக்கு – 4 பிர்க்கா மற்றும் கொத்தமல்லி பயிருக்கு 1 பிர்க்கா அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள் மேற்கண்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவர்கள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். கடன் பெற விவசாயிகள் மாவட்டத்தில் இத்திட்டதை செயல்படுத்தும் காப்பீடு நிறுவனமான அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பயிர் காப்பீட்டு கட்டணமாக ஒரு எக்டருக்கு வாழை ரூ.12,036, மரவள்ளிக்கு ரூ.4,230, கத்தரிக்கு ரூ.2,878, வெங்காயத்திற்கு ரூ.5,477, தக்காளிக்கு ரூ.3,674, மற்றும் கொத்தமல்லி ரூ.1,531 செலுத்தினால் போதுமானது.
விவசாயிகள் இரபி 2022-23-ம் பருவத்திற்கு காப்பீடு செய்ய கொத்தமல்லிக்கு கடைசி நாள் 18.01.2023, வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிக்கு கடைசிநாள் 31.12.2022, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு கடைசி நாள் 28.02.2023 ஆகும். எனவே விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு அருகாமையில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.