ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்தி வைப்பு – சோகத்தில் மாடு பிடி வீரர்கள்.!!

மிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பிரசித்தி பெற்ற தமிழ் நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் கலெக்டர் தலைமையில் சட்டத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் பல பிரபலங்கள் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற இருந்தது. ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி நடக்க இருந்த போட்டிகள் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது மாடு பிடி வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக காளைகள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் சுமார் 700 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான பரிசோதனை மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனைகள் மருத்துவ குழுவினர்களால் நடைபெற்று வந்தது. வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. காளைகள் செல்லும் இருபுறமும் தட்டி வைத்து அடைக்கும் வேலையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும் அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கலெக்டர் பார்வையிட்டபிறகு இந்த அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல் படி ஏற்பாடுகள் செய்த பின்னர் வேறு ஒரு தேதியில் அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி தச்சங்குறிச்சியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காளைகள் வராமல் இருக்க ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அங்கே குவியத் தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.