பொள்ளாச்சி நகராட்சி இளம் வயது திமுக பெண் கவுன்சிலர் நர்மதா திடீர் ராஜினாமா..!

கோவை : பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரான கண்ணுச்சாமி என்பவரது மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் அவர், சொந்த காரணங்களுக்காக தன்னால் இந்த பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், நான் வகிக்கும் நகரமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கி கொள்கிறேன்.இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.பின்னர் நர்மதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 10 மாதங்களாக நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த நான், எனது சொந்த காரணங்களுக்காக இந்த பதவியில் இருந்து விலகும் விருப்ப கடிதத்தை அளித்து உள்ளேன். மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வதற்கு வேறு சிறந்த களம் அமையும் என்றும், இது எனக்கான களம் அல்ல. என்றும் உணர்ந்து விலகி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.. ராஜினாமா செய்த நர்மதா குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். மேலும் குரூப்-1 தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவிற்கு காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.