பாமக மாநாட்டிற்கு தடை கோரிய மனு தள்ளுபடி… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாமல்லபுரத்தில் 11ம் தேதி நடைபெறும் பாமக மாநாட்டிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கக்கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் “2013ம் ஆண்டு பாமக மற்றும் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு திருவிழாவில் பங்கேற்க சென்றவர்களால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாதி கலவரம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு மக்கள் தாக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 4 பேர் பலியாகினர்.

இந்நிகழ்வுக்கு பின் சித்திரை முழு நிலவு கூட்டத்தில் அரசு அனுமதி அளிப்பதில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு கூட்டம் நடத்துவது, எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு இன்று மே 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நிகழ்ச்சிக்கு ஏற்கனவே அனுமதி தரப்பட்டுள்ளதால் அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.