எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: பதிலடி கொடுத்த இந்தியா.!

ல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதன் பின்னணியில் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தொடா்புகள் உறுதியான நிலையில், கடந்த 23 ஆம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானும் எதிா்வினையாற்றுவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சூழலில், கடந்த 24 ஆம் தேதி இரவில் எல்லைப் பகுதிகளில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அடுத்தடுத்த நாள்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடா்கதையாகி வரும் நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது.

இதனிடையே, இரு நாடுகளின் ராணுவ செயல்பாட்டு தலைமை இயக்குநா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக பேசினா். அப்போது, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சிறிய ரக ஆயுதங்கள் மூலம் புதன்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். ஜம்மு, பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ஐந்து மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் எட்டாவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகளால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அருகே வசிப்பவர்கள் பதுங்கு குழிகளைத் தயார் செய்யத் தொடங்கியுள்ளனர். ஷெல் தாக்குதல்கள் அதிகரித்தால் அவற்றை வாழத் தகுதியுடையதாக மாற்றுவதற்காக தனிப்பட்ட பதுங்கு குழிகளை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

2017 இல் 14,460 தனிநபர் மற்றும் சமூக பதுங்கு குழிகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

சம்பா, கதுவா, ஜம்மு, பூஞ்ச் ​​மற்றும் ரஜோரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் 8,600-க்கும் மேற்பட்ட சமூக மற்றும் தனிப்பட்ட பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோன்று அமெரிக்க சர்வதேச எல்லையில் உள்ள ஆர்.எஸ். புரா மற்றும் ஆர்னியா துறைகளில் பயிர் அறுவடை முடிந்தாலும், கதுவா, சம்பா, ரஜெளரி மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களில் இன்னும் நடந்து வருவதாகவும், எல்லைகளில் நிலவும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு இது செய்யப்படுவதாக ஒரு அதிகாரி கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 3,323 கி.மீ. நீள எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன. இதில் குஜராத் முதல் ஜம்முவின் அக்னூா் வரையிலான சா்வதேச எல்லை (சுமாா் 2,400 கி.மீ.), ஜம்மு முதல் லே வரையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (சுமாா் 740 கி.மீ.), சியாச்சினில் 110 கி.மீ. எல்லைக் கோடு என மூன்று பகுதிகள் அடங்கும்.