ஊட்டி மலர் கண்காட்சி – திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

ன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே 15ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டிக்கு செல்லும் வழியில் கோத்தகிரி, கட்டப்பெட்டு உள்ளிட்ட இடங்களில் கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் பழங்குடியின மக்களை சந்தித்து பேச உள்ளார். வருகிற 15ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார்.

இதையடுத்து 16ம் தேதி 5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்..