அண்ணாமலையின் என் மண். என் மக்கள்.. பாதாயாத்திரை- உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார்..!

இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் சூழலில் இந்த நடைபயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதற்காக ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய நாடாளுமன்ற கட்டட வடிவில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.கவினர் கூறிவருகின்றனர். இதில் அ.தி.மு.க, த.மா.க, ஐ.ஜே.கே உள்ளிட்ட பா.ஜ.க கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.விழாவில் கலந்து கொள்வதோடு ராமேஸ்வரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு மாலை மதுரை வரும் அவர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வருகிறார். அங்கிருந்து காரில் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஓய்வெடுக்கிறார். மாலை 5.45 மணிக்கு விழா மேடைக்கு வரும் அமித் ஷா பாதயாத்திரையை தொங்கிவைத்து உரையாற்றிவிட்டு, இரவு விடுதியில் தங்குகிறார்.

29-ம் தேதி அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். அதனை தொடர்ந்து அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, கலாமின் குடும்பத்தாரை சந்திக்கிறார். அதன்பிறகு குந்துகால் கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்வதோடு தன்னுடைய இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பங்கீடு குறித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று பாதயாத்திரை தொடங்கப்பட உள்ளதையொட்டி, நேற்று மாலையே ராமேஸ்வரத்திற்கு குடும்பத்துடன் வந்த அண்ணாமலை, ராமேஸ்வரம் வடக்கு ரத வீதியில் ராம் ஆஞ்சநேயா சத்திரத்தில் உள்ள கோயிலில் குடும்பத்துடன் திடீர் பூஜை செய்தார். பாதயாத்திரை எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் நரசிம்ம பூஜையை நடத்தியதாக பா.ஜ.கவினர் தரப்பில் சொல்லப்படுகிறது. அதன்பிறகு விழா மேடையை பார்வையிட வந்த அண்ணாமலையை கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை நிர்வாகிகளிடம் கேட்டறிந்த பின்னர் புறப்பட்டு சென்றார்.

ராமேஸ்வரத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேதாளை அருகே செக்போஸ்ட் அமைத்து ராமேஸ்வரத்திற்குள் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். அதேபோல் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அதிரடி ஆய்வு நடத்தி சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என சோதனை செய்தனர்.

அமித் ஷா வந்து செல்லும் இந்த இருநாள்களும் தங்கும் விடுதிக்கு புதிதாக வரும் நபர்கள் குறித்த முழுவிபரங்களையும் அனுப்பிவைக்க வேண்டும் என தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அமித் ஷா வருகையால் மண்டபம் முதல் ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதுமே போலீஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.