மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.மதுரை பாண்டிக்கோவில் அம்மா திடலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலையில், முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோவில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மதுரையில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு காலை 10.45 மணியளவில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் திடலுக்கு பட்டு வேட்டி, சட்டை அணிந்தபடி ஆளுநர் ஆர்.என். ரவி வந்தார். அப்போது மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கண்காட்சிக்கு சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்யும்போது முருகப்பெருமானுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். தொடர்ந்து திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளின் கண்காட்சிக்கு சென்று முருகனை வழிபட்டார்.தரிசனம் முடித்து ஆளுநர் வெளியே வந்தபோது, அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அங்கிருந்த பக்தர்களுக்கு கைகொடுத்தார். தொடர்ந்து அறுபடை கண்காட்சி முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆளுநர், பக்தர்களை பார்த்து கையசைத்த வண்ணம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கடவுள் முருகன் நம்முடைய அடையாளம். அனைத்திற்கும் முதன்மையான கடவுள் முருகன். இந்துக்கள் அனைத்து இடங்களிலும் இருக்கின்றனர். சிவன் எப்படி முக்கியமான கடவுளோ, அதுபோல் முருகனும் முக்கியமானவர்.அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதனை மக்கள் கூட்டம், கூட்டமாக பார்ப்பதும் கூடுதல் மகிழ்ச்சியான விஷயம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக உள்ளது. இந்து முன்னணி அமைப்பினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது;ஆளுநர் ஆர்.என்.ரவி
