வாகன ஓட்டிகளே!! அடுத்த ஷாக்கிங் நியூஸ்… ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்.!!

ஏப்ரல் 1ம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டண உயர்வு கட்டணம் உயர்கிறது என மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் பரனூர், சூரப்பட்டு, சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிக் கட்கரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மாநில அரசு விடுத்திருந்த கோரிக்கை பட்டியலில் உள்ள சூரப்பட்டு மற்றும் வானகரம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்து மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் ரூ.65 லிருந்து ரூ.75 ஆக உயர்த்தி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ. 60 ஆக இருந்த கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் ரூ.90 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்து மற்றும் டிரக்குகள் ஒருமுறை செல்ல ரூ.95 ஆக இருந்த கட்டணம் ரூ.125 ஆக உயருகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.145-ல் இருந்து ரூ.190 ஆக உயருகிறது. கனரக கட்டுமான எந்திரங்கள், மண் நகரும் உபகரணங்கள், 3 முதல் 6 அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.150 ஆக இருந்த கட்டணம் ரூ.195 ஆக உயருகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.230-ல் இருந்து ரூ.295 ஆக அதிகரிக்கிறது. 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.185-ல் இருந்து ரூ.240 ஆக உயருகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.280-ல் இருந்து ரூ.360 ஆக உயருகிறது. அதாவது குறைந்தபட்சம் ரூ.5-ம் அதிகபட்சமாக ரூ.80 வரையும் கட்டணம் உயருகிறது.