ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்.. எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்… மற்ற விரல்களுக்கு என்ன ஆச்சு..? சிரங்கு வந்துவிட்டதா… நடிகர் செந்தில்.!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நகைச்சுவை நடிகர் செந்தில், பா.ஜ.க வேட்பாளர் ட.முருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதாக கூறினார். பிரதமர் வீடு கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டும் 12 லட்சத்திற்கு அதிகமான பயனளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இலவச கேஸ் இணைப்பு திட்டத்தில் 37 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாகவும், ஜல் ஜீவன் திட்டத்தில் 90 லட்சம் பயனாளிகளுக்கு வீடு தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஐந்தரை லட்சம் கோடி தமிழகத்திற்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,

இதில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி நான்கரை வருடங்கள் ஆட்சியில் இருந்ததாகவும், திமுக ஸ்டாலின் மூன்று வருடங்கள் ஆட்சியில் இருந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே இருவரும் சேர்ந்து எத்தனை கோடிகளை முழுங்கி இருப்பார்கள். ஆனால் இருவரும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என பொய் பேசி வருகின்றனர். மக்களை முட்டாளாக்கி வருகின்றனர் என விமர்சித்தார். நிச்சயமாக மத்தியில் மீண்டும் ஆட்சியில் அமருவது மோடிஜி தான். . தற்போது கச்சத்தீவு பிரச்சினையை நாம் மட்டும் தான் கையில் எடுத்துள்ளோம். வேறு யாருக்கும் அதை பற்றி பேச பயம். மீனவர்களை எங்கு பார்த்தாலும் சுட்டுக்கொன்று கொண்டு கொன்று விடுகிறார்கள். அந்த நிலை மாற வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களால் தான் இதனை தடுத்து நிறுத்த முடியும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மோடிஜி நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். கொரோனா காலத்தில் அமெரிக்கா நம்மிடம் இருந்த கொரோனா மருந்திற்காக கையேந்தி நின்றது. வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா நம் மருந்திற்காக காத்திருந்தது. எனவே மோடி ஜி நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என தெரிவித்தார். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். மற்ற விரல்களுக்கு என்ன ஆச்சு? சிரங்கு வந்துவிட்டதா? என நடிகர் செந்தில் விமர்சித்தார்.