கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி… ஜூன் 2ல் மனுத்தாக்கல் என தகவல்.!!

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட, ஜூன் 2ஆம் தேதி மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலங்களவையில் திமுகவுக்கு மொத்தம் 4 இடங்கள் கிடைக்கும் என்றும், அதில் ஒன்றில் கமல்ஹாசன் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதில் திமுக ஆதரவுடன் கமல் எம்பியாக தேர்வாவார் என்று சொலப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சார்பில் மாநிலங்களவை எம்பிக்களாக வில்சன், சண்முகம், சந்திரசேகரன் மற்றும் அப்துல்லா ஆகியோர் இருக்கின்றனர். இது தவிர மதிமுக சார்பில் வைகோவும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் எம்பிக்களாக இருக்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன்.19ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜூன்.2ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில்தான் திமுக ஆதரவுடன் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. திமுகவை பொறுத்தவரை 4 எம்பிக்களுக்கான பலம் இருக்கிறது. அதேபோல அதிமுகவுக்கு 2 எம்பிக்கள் கிடைக்கும். திமுக சார்பில் வில்சனுக்கு மீண்டும் எம்பியாக வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மற்ற 2 பேர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்.

அதேபோல, இந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவது என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது மநீமவுக்கும் திமுகவுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் கமலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது என்று சொல்லப்பட்டிருந்தது. எனவே கமல் போட்டியிட திமுக ஆதரவளிக்க இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

முன்னதாக மக்கள் நீதி மையத்தின் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினருக்கு போட்டியிடுவது என்று கட்சி நிர்வாகிகள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.