முடிவுக்கு வருகிறதா… ரஷ்யா – உக்ரைன் போர்..?

நேட்டோ அமைப்பில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்து வந்தார் . ஆனால் அதனை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மேற்கொண்டு வந்தார் .

இந்நிலையில் , ரஷ்ய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யாவின் முப்படைகளும் கடந்த 20 நாள்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன . கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் , மிகப் பெரிய அணு நிலையங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து , உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன . இந்நிலையில் , நேட்டோ அமைப்பில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நேட்டோவில் இணையப் போவதில்லை என்ற உண்மையை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

போர் தொடங்கிய பிறகு உக்ரைன் இணைவதாக கூறிய நேட்டோ எந்த உதவியும் செய்யவில்லை. உக்ரைன் நாட்டில் உடமைகள் சேதம் அடைந்ததுதான் மிச்சம். அதனால் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஏராளமான சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். உக்ரைன் நாட்டின் இந்த முடிவால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.