கோவையில் மாமனார், கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய மனைவி மீது வழக்குப்பதிவு ..!

கோவை கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 69). இவரது மகன் கார்த்திகேயன் (30). இவருக்கும் ஜீவிதா (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்தனர். ஜீவிதா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஜீவிதா தனது தங்கை சத்தியா, அவரது கணவர் சக்திவேல், மற்றும் உறவினர் பாலன் ஆகியோருடன் கணவர் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டு இருந்தார். இதனை பார்த்த ராஜகோபால் வெளியே வந்து பார்த்தார். அப்போது ராஜகோபாலுக்கும், ஜீவிதாக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் சத்தத்தை கேட்டு கார்த்திகேயன் அங்கு வந்தார். அவரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜீவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜகோபால் மற்றும் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மர கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் பலத்த காயம் அடைந்த ராஜகோபால் மற்றும் கார்த்திகேயனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ராஜகோபால் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜீவிதா, தங்கை சத்தியா, அவரது கணவர் சக்திவேல், மற்றும் உறவினர் பாலன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.