பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் துடிதுடித்து உயிரிழப்பு..!

பெர்லின்:ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து, சாலையில் வெள்ளம் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன.

ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியால் ஆன மீன் தொட்டி அமைக்கப்பட்டு, இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.’அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த தொட்டி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு திடீரென உடைந்து சிதறியது. வெப்பநிலை, மைனஸ் 10 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் கண்ணாடி தொட்டியில் விரிசல் ஏற்பட்டு உடைந்ததாக சொல்லப்படுகிறது.மீன் தொட்டியிலிருந்து வெளியேறிய நீர், சாலையில் ஆறாக ஓடியது. இதில் இருந்த அரிய வகை மீன்களும் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன.