அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது..? நீதிபதிகள் சரமாரி கேள்வி..? அரசு தரப்பு திணறல்..!

துதொடர்பாக நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பினர். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை பணி இடை நீக்கம் செய்யாதது ஏன்.?

அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்பட்ட பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை காரணம் என்ன? இதற்கு பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளரை பணிநீக்கம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு (IG)உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக நிலங்களை பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பீட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உஷாராணி (சார் பதிவாளர்) என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார். இவ்வாறு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

* அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்? அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

* தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?

* லஞ்ச ஒழிப்புத் துறையில் தேனி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுக்கள் கொடுக்கபட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

* தேனி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் மீது பத்திரப் பதிவுத்துறை ஐஜி உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது?

* அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்யக் கூடாது.

* இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை இருக்கும் என்று கூறிய நீதிபதிகள், சார் பதிவாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை  (செப். 22) ஒத்தி வைத்தனர்.