விவசாயிகளே உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இதோ… வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம்… இறையன்பு அதிரடி அறிவிப்பு.!!

சென்னை: கோடை வெப்பத்தால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுள்ளன. நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வண்டல் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் வி.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஏரி, குளத்தில் எந்தெந்த பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என்பது குறித்து தொழில்துறை 2017ஆம் ஆண்டிலேயே அரசு ஆணை வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் உள்ள நீா் வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் அறிவிக்கப்பட்ட ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரு மாதங்களுக்குள் அதாவது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை காலமாகும். வண்டல் மண் எடுப்பதன் மூலம் நீர் நிலைகளை ஆழப்படுத்தலாம். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் தேக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.