முடி வெட்ட சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது

முடி வெட்ட சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த 32 வயது பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் எனது மகன், மகளுக்கு முடி வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்து சென்றேன்.
அங்கு கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மணிகண்டன் (53) என்பவர் முடி வெட்டிக்கொண்டு இருந்தார்.
முதலில் எனது மகனுக்கு முடி வெட்டினார். பின்னர் எனது மகளுக்கு மணிகண்டன் முடி வெட்டினார். அப்போது நான் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றேன். அப்போது மணிகண்டன் எனது மகளுக்கு தொல்லை கொடுத்தார். நான் திரும்பி வந்து பார்த்த போது எனது மகள் அழுது கொண்டு இருந்தாள்.
நான் என்ன என்று கேட்டபோது மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முடிவெட்ட சென்ற 3¾ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.