விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்!

ரயிலில் சென்று,விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு…

கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அறிவியல் கண்காட்சி மற்றும் பல்வேறு அருங்காட்சியகங்களை பார்வையிட்டனர். பாடப்புத்தகங்களில் பார்த்த அறிவியல் கண்டுபிடிப்புகள், வரலாற்றுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நேரில் கண்டு ரசித்த மாணவர்கள், இது தங்களின் அறிவுத்திறனை மேலும் மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

சுற்றுலா நிறைவில், பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு திரும்பிய அவர்கள், விமான நிலையத்தில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றனர்.இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,“பாடப்புத்தகத்தில் பார்த்த காட்சிகளை நேரில் சென்று பார்வையிட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இதுவரை தரையில் இருந்து வானத்தை நோக்கி விமானத்தை பார்த்து ரசித்தோம். இப்போது விமானத்தில் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது,” என்று உற்சாகமாக தெரிவித்தனர்.