ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டம்… 6 மாத காலத்திற்க்கான ஒப்பந்தம் தயாராவதாக தகவல்..!!

டெல்லி: ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை இரட்டிப்பாக்க இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்குலக நாடுகள், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முன்வந்த ரஷ்யா, இனி அமெரிக்க டாலரில் வர்த்தகம் கிடையாது என அறிவித்துள்ளது. ரஷ்யாவின் வர்த்தக நடவடிக்கை நேர்மறையான திசையில் செல்லும் நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 6 மாத கால ஒப்பந்தம் ஒன்றும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த சலுகை விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த ஏப்ரலில் 2 லட்சத்து 84 ஆயிரம் பீப்பாய்களாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, மே மாதத்தில் 7 லட்சத்து 40 ஆயிரம் பீப்பாய்களாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.