சூடு பிடிக்கும் தேர்தல் களம்… திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் இரு பெரும் திராவிட கட்சிகள். .!!

மலைக்கோட்டையாக விளங்கும் திருச்சி தொகுதியிலிருந்து தங்களது பிரசாரத்தைத் தொடங்குவதால், வரும் மக்களவைத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
அதாவது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தேர்தல் பிரசாரத்தை மார்ச் 22ஆம் தேதி திருச்சியிலிருந்து தொடங்குகிறார். அதுபோலவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தேர்தல் பிரசாரத்தை மார்ச் 24ஆம் தேதி அதே திருச்சியிலிருந்து தொடங்கவிருக்கிறார்.கட்சியின் மிகப்பெரிய பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைக்கும் அமைச்சர் கே.என். நேரு, சிறுகனூரில் நடைபெறவிருக்கும் திமுகவின் முதல் பிரசாரப் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகளை கண்காணித்து வருகிறார். அவர் கூறுகையில், இந்தப் பொதுக்கூட்டத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் நமது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்ட மேடையை அலங்கரிப்பார்கள் என்கிறார் நேரு.
திமுக வேட்பாளர் பட்டியல்: வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்பிக்கள்
மக்களவைத் தேர்தலில், திமுகவின் முதல் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்துத்தான் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவும் பங்கேற்பார். இதுபோல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உள்பட்ட வண்ணன்கோயில் பகுதியில், மார்ச் 24ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். இந்தப் பொதுக் கூட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் அறிமுகமும் நடைபெறவிருப்பதாக, பொதுக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக சார்பில் இன்று ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தேமுதிக கூட்டணியும் இன்று உறுதி செய்யப்பட்டு, தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் 5 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.