அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமனம்- ஓபிஎஸ் அடுத்த அதிரடி ..!

திமுகவின் அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு.

அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, அதிமுக அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார். தேர்தல் பிரிவு செயலாளராக சுப்புரத்தினம், மகளிரணி செயலாளராக ராஜலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று, விழுப்புரம், கடலூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில், நேற்று அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதையடுத்து சில மணி நேரத்தில், பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுபோன்று, இருவரும் மாறி, மாறி நியமிப்பது, நீக்குவது தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அதிமுகவின் புதிய அமைப்பு செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்து அறிவித்துள்ளார்.