கோவை ஜூன் 12 கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் நீலாவதி ( வயது 66) இவர் கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோடு , மகேஷ் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை முடிந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக அவினாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துநின்றார். அப்போது சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த தனியார் ஆம்புலன்ஸ் நீலாவதி மீது மோதியது .இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து நீலாவதியின் மகன் போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார் .இதன் பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த மதன் குமார் (வயது 19) என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கிய மதன் குமார் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பழகுனர் உரிமம் (எல். எல். ஆர் )மட்டும் வைத்துக்கொண்டு ஆம்புலன்சை ஒட்டியது தெரிய வந்தது .மேலும் தன்னுடன் ஓட்டுநர் உரிமம் உள்ள ஒருவரை அருகில் பயிற்றுனராக வைத்துக் கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பழகுனர் உரிமம் மட்டும் வைத்துக்கொண்டு விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு. உரிமம் பெறாத டிரைவர் கைது.போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.
