இந்த ஆலோசனைக் கூட்டங்களில், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது நமக்கு லாபகரமானதா?” என்ற நேரடி கேள்வியை சபரீசன் முன்வைத்துள்ளார். அதற்குப் பதிலளித்த பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மற்ற எந்த மாவட்டங்களிலும் காங்கிரஸால் திமுகவிற்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி அதிகரிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் உள்ள காங்கிரஸ் செல்வாக்கைக்கூட, முறையான தேர்தல் வியூகங்கள் மற்றும் கூடுதல் கவனத்தின் மூலம் திமுகவே ஈடுகட்ட முடியும் என்பதால், காங்கிரஸ் இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கலாம் என்ற அதிரடி கருத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் இந்த ஆய்வில் விவாதிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு 20 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுவது ஒரு பிம்பமே தவிர, அது திமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் விஜய்க்கு இருக்கும் ஓரளவிலான செல்வாக்கு, ஏற்கனவே நாம் தமிழர் கட்சி வைத்திருக்கும் வாக்குகளில் வேண்டுமானால் பிளவை ஏற்படுத்தலாமே தவிர, திமுகவின் கோட்டையைத் தகர்க்க முடியாது என்பதே அவர்களின் கணிப்பாக உள்ளது.
தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கூடுதல் இடங்களைக் கோரி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், திமுக தரப்பில் இந்த ரகசிய சர்வே முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருவேளை காங்கிரஸ் பிடிவாதம் காட்டினால், அவர்களைக் கழற்றிவிட்டு தேர்தலைச் சந்திக்கவும் திமுக தயாராகி வருவதாகத் தெரிகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே “கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்து வராது” என்று குறிப்பிட்டிருந்தது, காங்கிரஸுக்கான ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.







