பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்.!!

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி அழைப்பு விடுத்தார்.

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் போராட்டத்திற்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் வாயில் வெள்ளை நிறத் துணியை கட்டி, கைகளில் பதாகைகளை ஏந்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற மௌன போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, உச்சநீதிமன்ற தீர்ப்பு குழப்பத்தை அளித்துள்ளது. குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் தற்போது விடுவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கவில்லை. ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு பதில் என்ன? தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்தால் தேசத்தின் சட்ட ஒழுங்கு, எங்கு செல்லும் என கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டப்போராட்டத்தை நடத்தி அற்புதம்மாள் வெற்றி பெற்றார் என்று பலர் சொல்கின்றனர். ராஜீவ்காந்திக்கும் மனைவி, குழந்தைகள் தாய் உள்ளார். அவர்களது குடும்பத்திற்கு என்ன பதில்? கொலை காரருக்கு பறிந்து பேசுவதை அனைவரும் ஏற்பதா? நியாமற்ற செயல். இதில் நேர்மை இருந்திருக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலையில் பேரறிவாளன் முக்கிய குற்றவாளி என போலிஸ் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியை கொலை செய்தால் மட்டும் தான் அவர் தமிழனா? இதன் விளைவு கட்டுப்பாடற்ற சட்டம் ஒழுங்கு தூக்கி எறியப்படும் சூழல் உருவாகும். தமிழக காங்கிரஸ் சார்பில் நியமான வருத்தங்களை இப்போராட்டம் மூலம் வெளிக்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் அறிவழியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.