சபாஷ் சரியான போட்டி… 2000 ரூபாய் நோட்டு குறித்து சாடிய முதல்வர் ஸ்டாலின்… திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை கையிலெடுத்த அண்ணாமலை.!

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், சிறு குறு வியாபாரிகள், பொதுமக்கள் என்ற பலரும் கலக்கமடைந்து உள்ளனர் என்றே கூறலாம்.

கடந்த காலங்களில் ஏற்பட்டது போல மீண்டும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படுமோ ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்று இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரமே ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு” என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரின் ட்விட்டர் பதிவுக்கு பதில் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம்! என்று பதிவிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.