மத்திய பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை கூடுகிறது..!

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 நாளை முதல் தொடங்குகிறது.

பிப்ரவரி 13 -ம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் இந்தக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நாளன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பில் முதன்மை பொருளாதார ஆலோசகர் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்வார். இதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார்.

உலகப் பொருளாதாரம் சுணக்கத்தில் உள்ளது. பணவீக்கம் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவில் இருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து முன்னணி பெரு நிறுவனங்களில் வேலை நீக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் நிறைவேற்றுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்