எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் பொறுத்து கொள்ளுங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கடந்த இருதினங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, நாளை முதல் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி வரும் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்.21-ம் தேதி வரை துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 6.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் விமர்சிக்கும் போது ஆவேசப்படக்கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். சட்டப்பேரவை மாண்பை காப்பாற்ற வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு நானும், அமைச்சர்களும் பதில் சொல்லிக் கொள்கிறோம்.

பேரவையில் அமைதி காக்க வேண்டும். மானிய கோரிக்கை விவாதங்களில் யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து முடிவு செய்துள்ளோம். அதன்படி தெரிவிக்கப்படும். தற்போது பட்ஜெட்டில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுல்கள் வெளியிடப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசின் திட்டம் குறித்து பொதுமக்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் உங்கள் தொகுதி நிதியை சரியாக பயன்படுத்தி அரசுத் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உதவ வேண்டும். காலையில் மட்டுமின்றி மாலையில் நடக்கும் பேரவைக் கூட்டத்திலும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் ஆதாரங்களோடு புள்ளிவிவரங்களுடன் தெளிவாக பேச வேண்டும்.

அமைச்சர்களும் தங்கள் துறையைப் பற்றிய எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளும் வகையில் விவரங்களை சரியாக வைத்துக் கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.