அடேங்கப்பா!! உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூலம் FIFA-வுக்கு கிடைத்த வருமானம் இத்தனை கோடியா..?

த்தாரில் நடந்து வரும் 2022, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் மூலம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவுக்கு கிடைத்த வருமானத்தை அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் மூலம் பிபா அமைப்புக்கு 750 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,339 கோடி கிடைக்கும்.

பிபா அமைப்பில் உள்ள 200 உறுப்பினர்கள் மூலமும், விளம்பரம் மூலமும் இந்த வருமானம் கிடைத்துள்ளது என பிபா தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டுரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் கிடைத்த வருவாயைவிட 100 கோடி டாலர் அதிக கத்தார் உலகக் கோப்பையில் கிடைக்கிறது.

இதர கூடுதல் வருமானங்கள் பிபா அமைப்புக்கு உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் நாட்டைச்சேர்ந்த வணிக நிறுவனங்கள் மூலம் கிடைத்துள்ளது. கத்தார் எனர்ஜி அதிகபட்சமாக விளம்பரம் தந்துள்ளது, அடுத்தார்போல், கத்தார் வங்கி QNB வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனமான ஓரிடோ ஆகியவை ஸ்பான்ஸர் வழங்கியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருநிறுவனம் பிபா உலகக் கோப்பைக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளது. ப்ளாக்செயின் நிறுவனமான கிரிப்டோ.காம் நிறுவனம் உலகக் கோப்பையில் ஸ்பான்ஸர் செய்துள்ளது.

பிபாவின் தலைவராக இருந்து பிளாஸ்டர்ஸ் காலத்தில் இரு ஒளிபரப்பு நிறுவனங்கள் ரஷ்யா, கத்தார் உலகக் கோப்பையை ஒளிபரப்ப மூலம் ஒப்பந்தம் கையொப்பமாகியது. இதில் ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையை அமெரிக்காவின் பாக்ஸ் சேனலும், கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பையை Beinsports சேனலும் ஒளிபரப்ப உரிமம் பெற்றன.

கொரோனா பரவல் இருந்த நிலையிலும்கூட பிபாவின் வருமானம் 250கோடி டாலர் அதிகரித்துள்ளது. உலகில் பலநாடுகள் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்திய காலத்தில், தங்களின் உறுப்பு நாடுகள் கால்பந்து பயிற்சி எடுக்கவும், குழு போட்டிகளை நடத்தவும் பிபா உதவி செய்தது.

அடுத்து நடக்கும் மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் போது பிபாவின் வருமானம் 1000 கோடி டாலரை எட்டும் என்று நம்பப்படுகிறது.2026ம் ஆண்டில் உலகக் கோப்பை, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் நடத்தப்படும்போது வருமானம் மேலும் அதிகரிக்கும்.

2023ம் ஆண்டு நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக தனியாக பல்வேறு ஒளிபரப்பு மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை பிபா செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2026ம் ஆண்டு நடக்கும் ஆடவர்களுக்கான உலகக் கோப்பையில் தற்போதுள்ள 32 அணிகளுக்குப் பதிலாக 48 அணிகளை களமிறக்கவும் பிபா திட்டமிட்டுள்ளது.