டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை நேரடியாக குறுக்கு விசாரணை செய்யலாம் – நீதிமன்றம் அனுமதி.!

கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.

எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, சென்னை சைாதப்பேட்டை 17வது பெருநகர மாஜிஸ்திரேட் முன், நேற்று டி.ஆர் பாலு ஆஜரானார். அப்போது அண்ணாமலை தரப்பில், மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ், பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தார். நேரமின்மை காரணமாக, குறுக்கு விசாரணை, அக்டோபர் 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த விசாரணையில் அண்ணாமலை நேரடியாக டி.ஆர்.பாலுவிடம் குறுக்கும் விசாரணை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.