அதிமுக விதிகள் மாற்றம்… நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது – தேர்தல் ஆணையம் பரபர தகவல்.!!

அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுகவில் மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டினர். அப்போது, அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடவும் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தனர். இந்த திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் நடந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இதற்கு மத்தியில், கடந்தாண்டு ஜூலை, 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விதிகளை அங்கீகரிக்கக் கோரி பழனிசாமி சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த திருத்த விதிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என பழனிசாமி தரப்பினர் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு படி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும், அதிமுகவில் திருத்தப்பட்ட விதிகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீங்கி, பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலும் இந்த விவகாரங்களில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதி முடிவு என்பதையும் தாங்கள் தெளிவாக புரிந்து வைத்திருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுபட்டது என்றும் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் தெரிவித்திருக்கிறது..