அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமென்று தீர்ப்பில் சொல்லவேயில்லை – கே.சி. பழனிசாமி டுவீட்..!

டப்பாடி பழனிசாமி தான் இனிமேல் எல்லாம் என்று கூறி விட முடியாது. அவர் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என நினைத்து பாருங்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தபோது, இவர், ஓ.பி.எஸ். அணியில் இருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இவர் தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில, திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முன்னாள் அதிமுக எம்.பி.யும் கே.சி.பழனிசாமி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 250 கோடி ரூபாய் திமுக செலவு செய்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருந்து வருகிறார்.

வரும் காலங்களில் கோடிஸ்வரர்களே தேர்தல் சந்திக்க முடியும் என்கிற நிலை தற்பொழுது தமிழகத்தில் திமுக உருவாகியுள்ளது. இதுபோன்ற செயல்களை அப்படியே விட்டு விட்டால் அடுத்து வரும் மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். சாமானியனுக்கும் அதிகாரம் என்பது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் வளர்த்த திராவிடம். பெரியாரின் பேரனுக்கு ஈரோடு தொகுதியில் வெற்றிபெற 250 கோடியும் தோற்கடிக்க 150 கோடியும் செலவிடுவதா திராவிடம்? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி பக்கம் கட்சி செல்லவில்லை. பொதுக்குழு செல்லும் என்று தான் கூறியுள்ளது. தீர்மானங்கள் செல்லும் என்று தீரப்பில் கூறவில்லை. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள உத்தரவு பிறக்குமாறு இபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே எடப்பாடி பழனிசாமி தான் இனிமேல் எல்லாம் என்று கூறி விட முடியாது. அவர் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என நினைத்து பாருங்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பான கே.சி.பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில்;- ஆளுநரால் இனி நிச்சயம் அதிமுக தலை நிமிர்ந்து நிற்கும் எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த விஷயம் பேசுபொருளாக மாறியுள்ளது.