சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்-குவியும் வாழ்த்துக்கள்..!!

நடிகரும் , இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கலைத்துறை தாண்டி பல்வேறு சமூக சேவை ஈடுபட்டு வருகிறார். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் நடத்தி வருவதுடன் , தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.

மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவது, முதியவர்களுக்காக தங்கும் மற்றும் உணவு வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தருவது என ராகவா லாரன்ஸின் சமூக சேவை பலரையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் சார்பாக அவரது சமூக சேவையை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. என் சார்பாக என் அம்மா இந்த விருதைப் பெற்றதால் இது எனக்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கலைஞர் கணினி கல்வியகம் மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர் , நான் எப்போதும் என்னுடைய வாழ்க்கை நினைத்துப் பார்க்கும்போது மா சுப்பிரமணியன் நினைத்து பார்ப்பேன். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார். அவர் பிழைத்ததற்கு காரணம் நிறைய மாணவர்களுக்கு கல்வி மற்றும் உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்று பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.