டெல்லி மேயர் தேர்தலில் வெற்றி வாகை சூடிய ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய்..!

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்று, புதிய மேயராக தேர்வாகியுள்ளார். நேற்று  நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 266 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் பாஜக வேட்பாளர் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தன நிலையில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓப்ராய்க்கு 150 வாக்குகள் கிடைத்தன.
இதன் மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியின் மேயராக தேர்வானார். 39 வயதான ஷெல்லி ஓப்ராய் மேலாண்மை படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இந்திய வர்த்தக கூட்டமைப்பின் வாழ்நாள் உறுப்பினராகவும் அவர் உள்ளார்.

இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கேஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். குண்டர்கள் தோல்வி அடைந்து மக்கள் வெற்றுள்ளனர். புதிய மேயர் ஷெல்லி ஓப்ராய்க்கு வாழ்த்து என அரவிந்த் கெஜ்ரிவால் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டெல்லி மாநகாரட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநாகாரட்சி பாஜக வசம் இருந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் அதை தன்வசம் ஆக்கியது.

மேயர் தேர்தலில் எப்படியாது வெற்றிபெற வேண்டும் என பாஜக முயற்சி செய்து வந்தது. கடந்த ஜனவரி 6, 24 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் மேயர் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் மூன்று முறை தேர்தல் ரத்தானது. இன்று நான்காவது முறை அவை கூடி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் ஆம் ஆத்மி வேட்பாளார் தற்போது வெற்றி பெற்றார்.