கோவை பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபர் கைது.

கோவை ஜூன் 25 கோவை சேர்ந்த பெண் ஒருவரின் ஆபாச புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சென்னையிலிருந்து புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது .இதையடுத்து போலீசார் அந்த சமூக வலைத்தள கணக்கை தீவிரமாக கண்காணித்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு,மகேந்திரா சிட்டி, வீரா புரத்தை சேர்ந்த ராஜா ( வயது 33 )என்பவர் அந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதை யடுத்து அவரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர் .இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் கூறியதாவது:- ராஜா என்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் .இவருக்கு பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பார்க்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து உள்ளனர். மேலும் அவரது சமூக வலைத்தள கணக்கிற்கு யாராவது பெண்களின் ஆபாச புகைப்படத்தை அனுப்பினாலும், அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார்? ஆபாச படங்களை எடுத்து ராஜாவுக்கு அனுப்பி வைக்கும் நபர்கள் உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.