மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகனுக்கு சிலை வைக்க இடம் தேர்வு. கட்டுமானபணிகள் விரைவில் தொடக்கம்.

கோவை ஜூன் 4 முருக பக்தர்களால் 7-வது படை வீடு என்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களையும்,மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.. கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருக பக்தர்களை கவரும் வகையில் மருதமலை கோவிலில் ரூ. 110 கோடி செலவில், 184அடி உயரத்தில் ஆசியாவில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இதையடுத்து இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் இந்த முருகன் சிலை அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். முருகன் சிலை மருதமலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட உள்ளது .இதற்காக இங்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 184 அடி உயரத்தில் முருகனுக்கு சிலை அமைக்கப்படும். சிலைக்கான பீடம் மட்டும் 39 அடி உயரம் கொண்டதாக இருக்கும் .மருதமலை அடிவாரம் அருகே 8 ஏக்கர் அரசு நிலத்தில் புதிய பஸ் நிலைய அமைக்கப்படும். இங்கு பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த தனி இட வசதி, பக்தர்கள் தங்கும் விடுதி, ஓய்வு அறை, கழிப்பறை உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மேலும் இங்கிருந்து கோவிலுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் தங்களது வாகனங்களை இந்த பகுதியில் நிறுத்திவிட்டு நடந்து சென்று 184 அடி உயர முருகனை தரிசனம் செய்யலாம். இடம் தேர்வு முடிந்ததை தொடர்ந்து விரைவில் சிலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது .இதுகுறித்துகோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:- ஆசியாவில் மிக உயரமான முருகன் சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மருதமலைக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் வாகனங்கள் நிறுத்தவும் , தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மலை படிக்கட்டுகளில் நடந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறையுடன் கூடிய ஓய்வெடுக்கும் அறை கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதும் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.