ஒளிமயமான எதிர்காலம்… இது தான் என் பிறந்த நாள் பரிசாக வேண்டும்- சசிகலா கோரிக்கை..!

சென்னை : நாளை மறுநாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியார் அறிவிக்கப்பட்டவரும் கொண்டாட இருக்கிறார். வழக்கத்தை விட இந்த பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் எனவும் தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும் தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான, புரட்சித்தலைவியின் வழிவந்த சிங்கங்களான, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன்.

உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன் உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன்.

ஆகையால், தற்சமயம் எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே, எனக்கு நீங்கள் அளிக்கின்ற, சிறந்த பிறந்தநாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே, மறைந்த நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன். என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள்.

ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்து கொண்டு இருக்கிறது. அதாவது “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி” என்று நம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் பாடியது போன்று, இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். வெற்றி நிச்சயம் நாளை நமதே அண்ணா நாமம் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வாழ்க புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க நன்றி, வணக்கம்” என கூறியுள்ளார்.