ஓட்டுநர் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் படியான புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உதாரணத்திற்கு ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை எடுத்திருந்தால், அதற்குப் பிறகு அவர் தனது 40-வது வயதில் புதுப்பிக்க வேண்டும். தற்போது இதில் மாற்றம் வரவிருப்பதால், அவருக்கு 50 வயதாகும் வரை அந்த ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த முடியும். இதனால் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயன்பாட்டில் இருக்கும். 50 வயதைக் கடந்த ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்.இதன் மூலம் அடிக்கடி உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறைவதுடன், பொதுமக்களின் நேரமும் செலவும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமை மாற்றம், வணிக வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல், முகவரி மாற்றம், நகல் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முழுமையாக இணையவழியில் மேற்கொள்ளும் வசதியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறைந்து, சேவைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படுவதால் மாநில அரசுகளின் வருவாயில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதன் மூலம் நிர்வாகத் திறன் மேம்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தின் மூலம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் தகவல்களை நாடு முழுவதும் எளிதாக சரிபார்க்கும் வசதியும் உருவாக்கப்பட உள்ளது. இதற்கிடையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு எதிர்மறைப் புள்ளிகள் (Negative Points) வழங்கும் புதிய முறையையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சிவப்பு விளக்கை மீறுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களுக்கு குறிப்பிட்ட அளவு புள்ளிகள் வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி விதிமீறல்கள் பதிவானால், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது அல்லது நிரந்தரமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துகளை குறைத்து, பொறுப்பான ஓட்டுநர் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் வடிவமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









