கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன், ரோஜா மலர்களால் அமைக்கப்பட்ட பாம்பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில் திடீரென நேற்று (மே 20) 63-வது மலர் கண்காட்சி தொடங்கும் என முதல்நாள் இரவு அறிவிக்கப்பட்டு, நேற்று காலை கண்காட்சி தொடங்கியது. இதனை ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சந்திரகவிதா, கோட்டாட்சியர் கீர்த்தனா, மாவட்ட சுற்றுலாஅலுவலர் கோவிந்தராஜ், மாவட்ட வன அலுவலர் அரவிந்த்,நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல வண்ண ரோஜாக்களால் புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பாம்பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது, பன்முக திறமையின் சின்னம் ஆகியவை ஒரு லட்சம் கார்னேஷன், ரோஜா மலர்களால் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அரசு துறைகள் சார்பில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
12 நாட்களுக்கு கண்காட்சி நடைபெறுகிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கும் நேரம் காலை 8 முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 80, சிறுவர்களுக்கு ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.







