தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தினமும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து, துறை வாரியாக உயர் அதிகாரிகளை அழைத்துத் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள், எவ்விதக் குறைபாடும் இன்றி சரியான எடையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய, தற்போது மாநிலம் முழுவதும் மின்னணு தராசு ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை தற்போது புதிய அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது:நியாய விலைக் கடைகளில் பொருட்கள் எடை போடப்படும் போது, அதன் துல்லியமான எடையைப் பணியாளர்கள் மட்டுமன்றி, கடையில் பொருட்கள் வாங்க நிற்கும் பொதுமக்களும் தெளிவாகப் பார்க்கும் வகையில் தராசின் இருபுறமும் டிஸ்ப்ளே (Dual Display) சரியாகத் தெரிகிறதா என்பதைத் தங்களது கடை பணியாளர்கள் உடனடியாகச் சரிபார்க்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கான விநியோகத்தில் எவ்வித முறைகேடும் நடந்துவிடக் கூடாது என்பதில் புதிய அரசு உறுதியாக உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில் அதிகாரிகள் நடத்தும் திடீர் ஆய்வுகளின் போது ஏதேனும் தவறுகளோ அல்லது எடை குறைபாடுகளோ கண்டறியப்பட்டால், அதற்குப் பொறுப்பான கடைப் பணியாளர்கள் மீது துறை ரீதியான மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என உணவுத்துறை எச்சரித்துள்ளது.









